வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

சனி, 8 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (07) எல்லாப் படியாலும் எண்ணினால் !

உடம்பின் நிலையாமையை அறிந்த சான்றோர், அதன் மீது பற்று வைப்பதில்லை !

-----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

------------------------------------------------------------------------------------------

பாடல் (07) எல்லாப் படியாலும் எண்ணினால் !

------------------------------------------------------------------------------------------

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை நல்லார்

அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்

பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழு மலி நோய் புல் குரம்பை நல்லார்

அறிந்து இருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு !

 

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

கமலம் = தாமரை

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

எல்லாப் படியாலும் = எல்லா வகையாலும் ; எண்ணினால் = ஆராயுமிடத்து ; இவ்வுடம்பு = இந்த உடம்பானது ; பொல்லாப் புழு = பொல்லாத புழுக்களுக்கும்; மலி நோய் = நிறைந்த பிணிகளுக்கும் ; புல் குரம்பை = புல்லிய குடிசையாக இருக்கிறது ; நல்லார் = நல்லறிவு உடையோர் ; அறிந்திருப்பார் = (இவ்வுடம்பின் அழிவை) அறிந்திருப்பார்கள் ; ஆதலினால் = ஆகையால் ; (அவர்கள்) கமல நீர்போல் = தாமரை இலையில் தண்ணீர் போல ; பிறிந்து இருப்பார் = (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள் ; பிறர்க்குப் பேசார் = (அதைக்குறித்து) பிறரிடம் பேச மாட்டார்கள்.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

எல்லா வகையாலும் ஆராய்ந்து பார்த்தால், மனிதவுடம்பானது பொல்லாத புழுக்களுக்கும், நிறைந்த பிணிகளுக்கும் இருப்பிடம் தரும் குடிசையாகத்தான்  அமைந்து இருக்கிறது !

 

கற்றறிந்த அறிஞர்கள் இவ்விடம்பின் அழியும் தன்மை பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள் !

 

அதனால்தான், தாமரை இலையானது தண்ணீரில் வாழ்ந்தாலும், னுடன் ஒட்டாமல் வாழ்வது போல், அறிஞர்கள் இந்த உடம்பின் மீது பற்று வைக்காமல் வாழ்வார்கள். இந்த உண்மையை உணராதவர்களிடம் இதைப் பற்றி அவர்கள்  பேசுவதும் இல்லை !

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

----------------------------------------------------------------------------------------

உடம்பின் இழிவை அறிந்த ஞானிகள் உடம்போடு கூடியிருப்பினும் அதில் பற்றற்று இருப்பார்கள் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) 24]

{08-01-2022}

 ---------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (08) ஈட்டும் பொருண் முயற்சி எண்ணிறந்த !

செல்வம் தேடி எத்தனை முயன்றாலும் !

----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (08) ஈட்டும் பொருண் முயற்சி !

-----------------------------------------------------------------------------------------

ஈட்டும் பொருண் முயற்சி எண்ணிறந்தா வாயினுமூழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம் தேட்டம்

மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணுந் தனம் !

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

ஈட்டும் பொருள் முயற்சி எண் இறந்த ஆயினும் ஊழ்

கூட்டும்படி அன்றிக் கூடா ஆம்- ஹேட்டம்

மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம் !

 

-----------------------------------------------------------------------------------------

வடசொற்கள்:

மரியாதை = பண்பு; மதிப்பு

தனம் = செல்வம்

மகிதலம் = பூமி

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

மகிதலத்தீர் = பூமியிலுள்ள மனிதர்களே ; கேண்மின் = கேளுங்கள் ; ஈட்டும் பொருள் = தேடுதற்குரிய பொருள்களானவை ; முயற்சி எண் இறந்த ஆயினும் = முயற்சிகள் அளவில்லாதன வாயினும் ; ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் = ஊழ் கூட்டும் அளவின் அல்லாமல் சேராவாம் ; தனம் தரியாது = ஊழினாலே (சேரினும்) அப்பொருள் நிலை பெறாது ; தேட்டம் மரியாதை = (ஆதலினால் நீங்கள்) தேடத் தகுவது மரியாதையேயாம்.

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

மாந்தர்களே கேளுங்கள் ! செல்வம் தேடுவதற்கான உங்கள் முயற்சிகள் எண்ணற்றவையாக இருக்கலாம் ! நீங்கள் எத்துணை முயன்றாலும் சரி ! உங்களிடம் எவ்வளவு சேரவேண்டுமோ அவ்வளவு தான் சேரும் !


அதையும் மீறி மிகுதியாகச் சேர்ந்தாலும், உங்களிடம் அது நிலையாகத் தங்கிவிடாது ! ஆகையால் நீங்கள் தேட வேண்டியது செல்வமன்று, பிறர் உங்களை மதிப்புடன் நோக்கத்தக்க உயரிய நிலைப்பாடு தான் !

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

பொருள் ஊழின் அளவன்றி வாராமையானும், வந்த பொருளும் நிலை பெறாமையாலும், நிலைபெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேடல் வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) 24]

{08-01-2022}

 ----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (09) ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் !

வற்றிவிட்டாலும் கூட ஆறுஊற்று  நீரை உலகுக்கு அளித்து உதவுகிறது !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

--------------------------------------------------------------------------------------

பாடல் (09) ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் !

--------------------------------------------------------------------------------------

ஆற்றுப்   பெருக்கற்    றடிசுடு  மந்நாளு  மவ்வாறு

ஊற்றுப்   பெருக்கால்  உலகூட்டும்  -  ஏற்றவர்க்கு

நல்லகுடிப்  பிறந்தார்  நல்கூர்ந்த   ரானாலும்

இல்லையென  மாட்டா    ரிசைந்து.

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு

ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்  -  ஏற்றவர்க்கு

நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.


-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

பெருக்கு = நீர்ப் பெருக்கு அற்று = வறண்டுபோய் அடி சுடும் = நடப்போர்  பாதங்களை மணல் சுடுகின்ற ஊற்று = ஆற்று மணலிடையே தோண்டப் பெறும் கிணறு போன்ற பள்ளம் உலகு ஊட்டும் = மக்களின் தாகத்தைத் தணிக்கும் ஏற்றவர்க்கு = இரவலர்களுக்கு நல்ல குடிப் பிறந்தார் = உயர்ந்த குடியில் பிறந்த மனிதர்கள் நல்கூர்ந்தார் = வறியவர்கள்; (நல்குரவு = வறுமை) இசைந்து = மனம் ஒப்பி.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

தண்ணீர் வற்றிக் கோடை வெப்பத்தால் கால் சுடும் அளவிற்கு எங்கும் மணல்வெளியாக மாறிப் போனாலும்கூட, அதைத் தோண்டுவோருக்கு, ஊற்று நீரைக் கொடுத்து இந்த உலகதிற்கு உதவுகிறது  ஆறு !

 

தைப்போல நற்குடியிற் பிறந்தவர்கள், தம் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்திலும் கூட, இரவலர்களுக்கு (பிச்சை எனக் கேட்போர்) மனமிசைந்து இல்லைஎனச் சொல்ல மாட்டார்கள். இயன்றதைத் தருவர்!

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 24]

{08-01-2022}

------------------------------------------------------------------------------------------