வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வேதாளம் சேருமே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதாளம் சேருமே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (23) வேதாளஞ் சேருமே ! வெள்ளெருக்குப் பூக்குமே !

பொய்சாட்சி சொல்பவர் குடும்பம் துன்பப்பட நேரும் !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

--------------------------------------------------------------------------------------

பாடல்: (23) வேதாளஞ் சேருமே !

---------------------------------------------------------------------------------------

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமேமூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரஞ் சொன்னார் மனை !

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

வேதாளம் சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும்;

பாதள மூலி படரும்; - மூதேவி

சென்று இருந்து வாழ்வள்; சேடன் குடி புகும்;

மன்று ஓரம் சொன்னார் மனை !

 

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

சேடன் = சேஷன் என்பதன் மரூஉ. சேஷன் 

என்பதற்கு வேறு பல 

பொருள்களுடன் பாம்பு என்னும் 

பொருளும் உள்ளது.

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

மன்று ஓரம் சொன்னார் மனை = வழக்காடு (நீதி) மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவருடைய வீட்டில் ; வேதாளம் சேரும் = பேய்கள் (வந்து) சேரும் ; வெள்ளெருக்குப் பூக்கும் = வெள்ளெருக்கு முளைத்துக் காடாகிப் பூக்கும் ; பாதாள மூலி படரும் = சப்பாத்திக் கள்ளிச் செடி படர்ந்து வளரும் ; மூதேவி சென்று வாழ்வள் = மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள் ; சேடன் குடிபுகும் = பாம்புகள் குடியிருக்கும்.

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

வழக்காடு (நீதி) மன்றத்தில் எந்தவொரு மனிதருக்கும் எதிராகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது. மனசாட்சியை மதிக்காமல் பொய் சாட்சி சொன்னால் அவர் குடும்பமே அழிந்து போகும்; அஃதன்றி அவர் குடியிருக்கும் வீடும் பாழாகிப் போகும் ! எப்படி ?

 

அவர் குடியிருக்கும் வீட்டில் பேய்கள் வந்து சேரும்; தீமையின் அடையாளமான வெள்ளெருக்கஞ் செடி வளர்ந்து பூ பூக்கும்; பாதாள மூலி எனப்படும் சப்பாத்திக் கள்ளி படர்ந்து வளரும்; வறுமைக்குக் காரணமாகச் சொல்லப்படும் மூதேவி போய் வாழ்வாள்;  பாம்புகள் குடியிருக்கும் புதர்கள் மண்டிப்போகும் !

 

[இவையெல்லாம், குடியும், குடியிருக்கும் இல்லமும் பாழாகும் என்பதை விளக்கும் குறியீடுகள் ! ஔவையார் மொழியில் சொன்னால்தானே மக்கள் சற்றுக் காதுக் கொடுத்தாவது கேட்கிறார்கள்]

 

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவர் குடும்பத்தோடு அழிவது மட்டுமன்றி அவர் குடியிருந்த வீடும் பாழாம்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

-----------------------------------------------------------------------------------------