வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

பெற்றார் பிறந்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றார் பிறந்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (18) பெற்றார், பிறந்தார், பெருநாட்டார் !


அன்பு என்னும் பற்று அறவே இல்லாதவர்கள்  “பிசினேறி”கள் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (18) பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் !!

-----------------------------------------------------------------------------------------

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்

உற்றார் உகந்தார் எனவேண்டார்மற்றோர்

இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே

சரணங் கொடுத்தாலும் தாம் !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------

பெற்றார், பிறந்தார், பெரு நாட்டார், பேருலகில்

உற்றார், உகந்தார் என வேண்டார்; - மற்றோர்

இரணம் கொடுத்தாலும் இடுவர்; இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம் !

 

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

இரணம் = புண்

சரணம் = புகலிடம்

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

பேர் உலகில் = பெரிய நிலவுலகத்திலே ; பெற்றார் = (எம்மை) பெற்றவர் ; பிறந்தார் = (எமக்குப்) பிறந்தவர் ; பெரு நாட்டார் = (எம்முடைய) பெரிய நாட்டினர் ; உற்றார் = (எம்முடைய) சுற்றத்தார் ; உகந்தார் = (எம்மை) நேசித்தவர் ; என வேண்டார் = என்று விரும்பாதவராகிய உலோபிகள் ; மற்றோர் = பிறர் ; இரணம் கொடுத்தால் = தம் உடம்பிலே புண் செய்தால் ; இடுவர் = (அவருக்கு எல்லாம்) கொடுப்பர் ; சரணம் கொடுத்தாலும் இடார் = (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றும் கொடார் ;


------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

அடுத்தவருக்குக் கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத பிசினேறிகள்தன்னைப் பெற்றவர்கள், தன் பிள்ளைகள், சுற்றத்தார், நண்பர்கள், நாட்டினர், என்னும் பற்று சற்றேனும் இல்லாதவர்கள் !

 

இந்தப்பிசினேறிகளிடம் எத்துணை அன்பு வைத்திருந்தாலும் அல்லது உதவி நாடிப் புகல் அடைந்திருந்தாலும்  யாருக்கும் எதையும் ருவதற்கு இவர்கள் துளிக்கூடத் துணியமாட்டார்கள் !

 

ஆனால், “பிசினேறிளைக் கொள்ளையர்கள் அடித்து உதைத்து, உடம்பைப் புண்ணாக்கிக் கேட்டால், அவர்கள்பால்  அச்சம் கொண்டு, கேட்கும் அனைத்தையும் தந்திடவும் தயங்கமாட்டார்கள் !

-----------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம்:

பிசினேறி = உலோபி (MISER)

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

”பிசினேறி”கள் (உலோபிகள்) தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கு அன்றி நலம் புரியும் தாய் தந்தையர், முதலாயினோருக்கு யாதும் கொடார் !!

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

-----------------------------------------------------------------------------------------