வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

ஒன்றை நினைக்கின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒன்றை நினைக்கின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (27) ஒன்றை நினைக்கின் அது ஒழிந்து !

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல்: (27) ஒன்றை நினைக்கின் அது !

-----------------------------------------------------------------------------------------

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்

அன்றி யதுவரினும் வந்தெய்தும்ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல் !


----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்

அன்றி அது வரினும் வந்து எய்தும்ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனை ஆளும் ஈசன் செயல் !


-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

ஒன்றை நினைக்கின் = ஒரு பொருளைப் பெறநினைத்தால் ; அது ஒழிந்திட்டு ஒன்றாகும் = அப்பொருள் கிடையாமல் வெறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும் ; அன்றி அது வரினும் வந்தெய்தும் = அப்படி அல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும் ; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் = (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றலும் நிற்கும் ; எனை ஆளுமீசன் செயல் = (இவையெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும் !


-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

ஒரு பொருளைப் பெற நினைத்தால், அப்பொருள் கிடைக்காமல் வேறொரு பொருள் வந்து கிடைத்தாலும் கிடைக்கும் ! அப்படி அல்லாமல், நினைத்த பொருளே வந்து எனக்குக் கிடைத்தாலும் கிடைக்கும் ! இன்னும் ஒரு பொருளை நினையாது இருக்கையில், அது தானே வந்து என்முன் நின்றாலும் நிற்கும் ! இவை எல்லாமே என்னை ஆண்டருளும் இறைவனின் திருவிளையாடல்கள் அன்றி வேறொன்றும் இல்லை  !

 

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

இருவினைகளுக்கு ஈடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின் படியே அன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

----------------------------------------------------------------------------------------