அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணர வேண்டும் !
-----------------------------------------------------------------------------------------
நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ்
மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம்
நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
----------------------------------------------------------------------------------------
பாடல் (38) நன்றென்றும் தீதென்றும் !!
-----------------------------------------------------------------------------------------
நன்றென்றும் தீதென்றும் நானென்றும்
தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார்
யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் !
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
நன்று என்றும் தீது என்றும் நான்
என்றும் தான் என்றும்
அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே – நின்ற நிலை
தான் அது ஆம் தத்துவம் ஆம் சம்பு
அறுத்தார் யாக்கைக்கு
போனவா தேடும் பொருள் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்;
-----------------------------------------------------------------------------------------
நன்று என்றும் = (இது) நல்லது என்றும் ; தீது என்றும் = (இது) தீயது என்றும் ; நான்
என்றும் = (இது செய்தவன்) நான் என்றும்
; தான் என்றும் = (இது செய்தவன்)
அவன் என்றும் ; அன்று என்றும் = (இது) அன்று என்றும் ; ஆம்
என்றும் = (இது) ஆகும் என்றும் ;
ஆகாதே நின்ற நிலை = பேதம் செய்யாமல் (இரண்டறக் கலந்து) நின்ற நிலையே ; தான் அது ஆம் தத்துவம் ஆம் = ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும் ; தேடும் பொருள் = தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய
கடவுளைத் தேடுவது ; சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா =
சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுவதற்கு அதுவே
அமையும் எனறு அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும் !
-------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
இது ”நல்லது” என்றும், இது ”கெட்டது” என்றும், இதை செய்தவன் ”நான்” என்றும், அன்று அன்று இதைச் செய்தவன் ”அவன்” என்றும், இது நடந்தது ”இன்று” என்றும், அன்று அன்று இது நடந்தது ”அன்று” என்றும், வாழ்க்கையில் நடைபெறும் செயல்களை வேறுபடுத்திப் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும் !
சம்பங் கோரைப் புல்லை அறுத்து எடுத்த பின் அதை கட்டுவதற்கு அதே சம்பங் கோரைப் புல்லைக் கயிறாகப் பயன் படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணர வேண்டும் !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு
பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ’
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,20]
{04-01-2022}
-----------------------------------------------------------------------------------------