வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

பாடுபட்டுத் தேடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடுபட்டுத் தேடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (22) பாடுபட்டுத் தேடிப் பணத்தை !

பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள் ! நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள் !

-----------------------------------------------------------------------------------------

ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி, நல்வழி ஆகியவை ஔவையார் இயற்றிய நூல்கள். இவற்றுள் நல்வழியிலிருந்து ஒரு செய்யுளைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (22) பாடுபட்டுத் தேடி !

-----------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டிங்

காவிதான் போயினபின் பாரே யநுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டுஇங்கு

ஆவிதான் போயினபின்பு யாரே அநுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.

 

----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

பணத்தைப் பாடுபட்டுத் தேடி = பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து ; புதைத்து வைத்து = (உண்ணாமலும் அறம் செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து ; கேடு கெட்ட மானிடரே = நன்மை எல்லாவற்றையும் இழந்த மனிதர்களே : கேளுங்கள் = (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக ; கூடு விட்டு = உடம்பினை விட்டு ; ஆவி போயின பின்பு = உயிர் நீங்கிய பின்பு ; பாவிகாள் = பாவிகளே ; அந்தப் பணம் = அந்தப் பணத்தை ; இங்கு ஆர் அநுபவிப்பார் = இவ்விடத்து யாவர் அநுபவிப்பார் ;

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து, பசியாற உண்ணாமலும், அறச் செயல்களில்  ஈடுபடாமலும், பாதுகாப்புக் கருதி, யாருக்கும் தெரியாமல் பூமியிலே புதைத்து வைக்கின்ற அறிவுகெட்ட மனிதர்களே கேட்பீர்களாக !

 

உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது. உங்களுக்குப் பிற்காலம் அந்தப் பணத்தின் பயனை துய்க்கப் போவது யார் என்று உங்களுக்கே தெரியாது !

 

அப்படி இருக்கையில் எதற்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் ? யாருக்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் ? உலக வாழ்வை நீப்பதற்கு முன் நற்செயல்களைச் செய்து நல்லவர் என்று பெயர் எடுங்களேன் !

 

----------------------------------------------------------------------------------------

இன்னொரு கருத்து:

----------------------------------------------------------------------------------------

வருந்தி வருந்தி உழைத்து கோடி கோடியாகச் சேர்த்து அளகைப் (BANK) பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகளாக மறைத்து வைக்கும் மதிகெட்ட மாந்தர்களே கேளுங்கள் ! வாழும் காலத்தில் அறச் செயல்களுக்குப் பணத்தைப் செலவிட்டு நற்பெயர் ஈட்டுங்கள் ! அதை விடுத்து, அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்க விழைவீர்களானால், அந்தப் பணமே உங்கள் கான்முளைகளை (வாரிசுகள்) சோம்பேறிகளாக்கி, உங்கள் குலக்கொடியையே வேரறுத்து வீழ்த்தி விடும் !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

------------------------------------------------------------------------------------------