வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

புதன், 5 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (29) மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று !


 பழுத்த மரம் வௌவாலை வாவென்று கூவி அழைப்பதில்லை !

----------------------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செயத பல நூல்களுள் நல்வழியும் ஒன்று. அதிலிருந்து, கொடையாளருக்கு எல்லாரும் உறவினரே என்பதை வலியுறுத்தும்  ஒரு பாடல் !

 

----------------------------------------------------------------------------------------

பாடல்.(29) மரம் பழுத்தால் ஔவாலை வாவென்று !

-----------------------------------------------------------------------------------------

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவரு மங்கில்லை  - சுரந்தமுதம்

கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத் தவர்.

 

---------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

---------------------------------------------------------------------------------------

மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி

இரந்து அழைப்பார் யாவரும் அங்கில்லை சுரந்து அமுதம்

கன்று ஆ தரல்போல் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத்தவர்.

 

-----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

மரம் பழுத்தால் = மரத்தில் காய்கள் முற்றிப் பழுத்திருந்தால் ; வௌவாலை = பழத்தைத் தின்று பசியாறும் வௌவாலை ; வா என்று கூவி =  வா” “வாஎன்று கூவி இரந்து அழைப்பார் = வருந்தி அழைப்பவர்கள் ; யாவரும் அங்கு இல்லை = அம் மரத்தருகில் ஒருவருமில்லை ; கன்று ஆ (கற்றா) = கன்றை உடைய பசு ; அமுதம் சுரந்து தருதல் போல் = பாலைச் சுரந்து கொடுத்தல்போல் ; கரவாது அளிப்பரேல் = ஏழை  எளியவர்க்கு  இல்லைஎன்று சொல்லாமல், (ஒளிக்காமல்,) தம்மிடம் உள்ள மிகுதியான செல்வத்தைக்  கொடுத்து அவர்தம் துன்பத்தைத் தீர்ப்பாராயின் ; உலகத்தவர் உற்றார் = உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே  வந்து ) ஈகையாளருக்கு உறவினர் ஆகிவிடுவார் !

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------------------------------------------------------------------------------

 

மரம் பழுத்திருந்தால் வௌவாலை வா”, “வாஎன்று  கூவி அழைப்பவர்கள் ங்கு யாரும்  ல்லை. அந்த மரம்தான் பழத்தின் நறுமணத்தால் வௌவாலை ஈர்த்துப் பழத்தை உண்ண அளிக்கிறது !

 

கன்றை உடைய பசு,  தான் ஈன்ற  கன்றுக்கும், தனக்கு உணவளித்து வளர்க்கும் மனிதருக்கும் தன்னிடம் உள்ள பாலை ஒளித்து வைத்துக்கொள்ளாமல் தானாகவே  சுரந்து அளிக்கிறது !

 

அதுபோல், மிகுதியாக உள்ள செல்வத்தைத் தமக்கென ஒளித்து வைத்துக் கொள்ளாமல்  ஏழை எளியவர்க்குத் தந்து துன்பம் தீர்ப்பாராயின்வௌவாலைப்போல் தாமே வந்து உலகத்தார் அனைவரும்  அவருக்கு உறவினர் ஆகிடுவர் !

 

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

கொடையாளர்க்கு அனைவருமே உறவினர்கள் தான் !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

 ----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (30) தாந்தாமுன் செய்தவினை தாமே !


அவரவரும் செய்த வினைகளை அவரவரும் துய்த்தலே நியதி!

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

 

----------------------------------------------------------------------------------------

பாடல்: (30) தாந்தாமுன் செய்த வினை !

----------------------------------------------------------------------------------------

தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்

பூந்தா மரையோன் பொறிவழியேவேந்தே

ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா

வெறுத்தாலும் போமோ விதி !

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

தாம் தாம் முன் செய்த வினை தாமே அநுபவிப்பார்

பூந் தாமரையோன் பொறி வழியேவேந்தே

ஒறுத்தாரை என் செயலாம் ஊரெல்லாம் ஒன்றா

வெறுத்தாலும் போமோ விதி !

 

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

அநுபவிப்பார் = துய்ப்பார்

----------------------------------------------------------------------------------------


அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

வேந்தே = அரசனே ; தாம் தாம் முன்செய்த வினை = தாம் தாம் முன்பு செய்த நல்வினை தீவினைகளை ; பூந்தாமரையோன் பொறி வழியே = தாமரை மலரில் இருக்கின்ற படைப்புக் கடவுள் விதித்தபடியே ; தாமே அநுபவிப்பார் = தாமே அநுபவிப்பார்கள் ; ஒருத்தாரை என் செயலாம் = (தீவினையாலே தூண்டப்பட்டு) தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம் ; ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ = ஊரிலுள்ள எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

வேந்தே ! ஒவ்வொரு மனிதனும் தான் முன்பு செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப  விளையும் பயன்களை எதிர்கொண்டு துய்த்தே (அநுபவித்து) ஆகவேண்டும் ! இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது !  

 

ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஒறுத்தால் (தண்டித்தால்) அதற்காக அவனை என்ன செய்வது ? முதல் மனிதன் செய்த தீவினையின் பயன் இரண்டாமவன் வழியாக ஒறுப்பாகி இருக்கிறது


இதுபோல் நேரக்கூடாது என்று ஊரெல்லாம் கூடி எதிர்த்தாலும் அல்லது வெறுத்தாலும், நேரவேண்டியது நேராமல் போய்விடுமா என்ன ? நேர்ந்தே தீரும் ! அதுதானே இயல்பு !

 

 ---------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------------------------------------------------------------

தமக்கு ஒருவன் துன்பம் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கு ஈடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்தது என்று அமைவதே அறிவு !

 

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

-----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

  

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (31) இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று !

பிழையுடைய பாட்டைவிட உரைநடை மேலானது !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

 

---------------------------------------------------------------------------------------

பாடல்: (31) இழுக்குடைய பாட்டிற்கு !

----------------------------------------------------------------------------------------

இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்றுவழுக்குடைய

வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்

தாரத்தின் நன்று தனி !

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்

ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று; - வழுக்கு உடைய

வீரத்தின் நன்று விடா நோய்; பழிக்கு அஞ்சாத்

தாரத்தின் நன்று தனி !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று = இலக்கண வழுக்களை உடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது ; உயர் குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று = உயர்குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப் பட்ட ஒழுக்கம் நல்லது ; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று = தவறுதலை உடைய வீரத்தினும் தீராப் பிணி நல்லது ; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று = பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

இலக்கணப் பிழைகள் நிறைந்த செய்யுள் எழுதிக் கருத்துச் சொல்வதைவிட, செய்யுள் அல்லாத உரைநடையில் ஒரு கருத்தைச் சொல்வது  மேலானது !

 

வாழ்க்கையில் நல்லொழுக்கம் உடையவராகத் திகழ்தல் என்பது, உயர் குலத்தில் பிறப்பதைவிடவும் மிகவும் மேலானது !

 

பகைவரை எதிர்கொண்டு நுண்ணறிவு (விவேகம்) இல்லாது வீரத்தைக் காட்டித் தோற்பதைவிட, நோயாளியாகவே வாழ்தல்  மேலானது !


தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமனைவியுடன் காலமெல்லாம் வாழ்வதைக் காட்டிலும் தனியனாக வாழ்தலே மேலானது !

 

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

இலக்கணப் பிழை உடைய பாட்டும், நல்லொழுக்கமில்லாத உயர்குலமும், தவறுதலை உடைய வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்.

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

-----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (32) ஆறிடும் மேடும் மடுவும் போல் !

செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் குணமுடையது !

---------------------------------------------------------------------------------------

ஔவையார் அருளிச் செய்த பாடல்கள் எல்லாம் இனிய வாழ்க்கைக்கு புதிய பாதை அமைத்துத் தருவன. செல்வத்தின்  நிலையாமை பற்றி நல்வழி என்னும் நூல் வாயிலாக  ஔவையார் அருளிய ஒரு பாடல் இதோ !

 

--------------------------------------------------------------------------------------

பாடல்.32. ஆறிடு மேடும் மடுவும் !

--------------------------------------------------------------------------------------

ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம்

மாறிடு மேறிடும் மாநிலத்தீர்  -  சோறிடுஞ்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக

உண்ணீர்மை வீறு முயர்ந்து.

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

ஆறு இடும் மேடும் மடுவும் போல் ஆம் செல்வம்

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்  -  சோறு இடும்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பு ஆக

உள் நீர்மை வீறும் உயர்ந்து.

 

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

தருமம் =அறம்

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------------------------------------------------------

மாநிலத்தீர் = இந்தப் பெரிய பூமியில் வாழும் மாந்தர்களே ! ஆறு இடும் மேடும் மடுவும் போல் = ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடும் பள்ளமும் போல; செல்வம் ஏறிடும் மாறிடும் = செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் ; (ஆதலினால்) சோறு இடும் = இரந்து வருவோர்க்கு சோறு  இடுங்கள் ; தண்ணீரும் வாரும் = (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வார்த்திடுங்கள் (கொடுங்கள்) ; தருமமே சார்பு ஆக = (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக ; உள்நீர்மை உயர்ந்து வீறும் = உள்ளத்திலே தூய தன்மை ஓங்கி விளங்கும். (போல் ஆம் என்பதில் வரும் ஆம் என்பது அசைச் சொல். இதற்குப் பொருள் காண வேண்டியதில்லை)

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

ந்தப் பூவுலகில் வாழும் மாந்தர்களே ! கேளுங்கள் ! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடுகளும் தாழ்வான பள்ளங்களும் போல உங்களிடம் உள்ள செல்வமும் வளர்வதும் தேய்வதுமான குணங்களை உடையது. ஆகையால், இத்தகைய நிலையற்ற செல்வம் மீது ஆசை வைக்காமல், அறவழியில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள்; இரவலர்களின் பசித்த வயிற்றுக்குச் சோறு இடுங்கள். அவர்கள் பருகுதற்கு நல்ல தண்ணீரும் கொடுங்கள்; இப்படிச் செய்து வருவீர்களானால், இந்தத் நல்வினையே உங்களுக்கு என்றும் துணை நிற்கும். உள்ளமும் தூய தன்மை உடையதாக ஓங்கி விளங்கும் !

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------        

நிலையில்லாதது  செல்வம். அது  உள்ள பொழுதே  இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளியுங்கள்மனம் தூய்மை பெற்று விளங்கும் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

-------------------------------------------------------------------------------------------------------

 

  

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (33) வெட்டனவை, மெத்தனவை வெல்லா !

இன்சொல் வெல்லும் ! வன்சொல் தோற்கும் !

----------------------------------------------------------------------------------------

ஔவையார் அருளிச் செய்த நல்வழி என்னும் நூலில் 33-ஆவதாக இடம் பெறும் இப்பாடலில் வன்சொல் தோற்கும், இன்சொல் வெல்லும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது !

----------------------------------------------------------------------------------------

பாடல்(33) வெட்டனவை ! மெத்தனவை !

----------------------------------------------------------------------------------------

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது  -  நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

----------------------------------------------------------------------------------------

வெட்டனவை மெத்தனவை வெல்லா ஆம்  வேழத்தில்

பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது நெட்டு இருப்புப்

பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.

 

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

வெட்டனவை = வன்சொற்கள்; மெத்தனவை = இன்சொற்கள் ; வெல்லாவாம் = வெல்லமாட்டா ; வேழத்தில் = வலிய யானை மீது ; பட்டு உருவும் கோல் = பட்டு ஊடுருவும் அம்பானது ; பஞ்சில் பாயாது = (மெல்லிய) பஞ்சுப் பொதியினை ஊடுருவித் துளைத்துச் செல்லாது ; நெட்டு = நீண்ட ; இருப்பு = இரும்பாலான ; பாரை = கடப்பாரை ; நெக்கு விடாப் பாறை = பிளவாத கருங்கற் பாறை ; பசுமரத்தின் = பச்சை மரத்தின் ; வேருக்கு நெக்கு விடும் = வேர் ஊடுருவினால் பிளந்து போகும்.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

வலிமையான யானை மீது பட்டு ஊடுருவும் அம்பானது, மென்மைத் தன்மை உடைய  பஞ்சுப் பொதியில் பட்டு ஊடுருவிச் செல்ல முடியாது. நீண்ட இருப்புப் பாரை, தாக்கும் போது பிளவுபடாத கருங்கற் பாறையானது உயிருள்ள மரத்தின் வேர் ஊடுருவிச் செல்லும்போது பிளவுபட்டு விடுகிறது. அதுபோன்றே வன்சொற்களால் இன்சொற்களை வெல்ல முடியாது ! இன்சொற்களே வெல்லும் !

 

----------------------------------------------------------------------------------------

 கருத்துச் சுருக்கம்:

----------------------------------------------------------------------------------------       

வன்சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும் என்பது இப்பாடலின் கருத்தாகும் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (34) கல்லானே யானாலும் கைப்பொருள் !

செல்வந்தனை உலகம் போற்றும் !

------------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

 

------------------------------------------------------------------------------------------

பாடல் (34) கல்லானே யானாலும் !

------------------------------------------------------------------------------------------

கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்

எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர் இல்லானை

இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லாது அவன்வாயிற் சொல் !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

கல்லானே ஆயினும் கைப் பொருள் ஒன்று உண்டாயின்

எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர்; - இல்லானை

இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்று எடுத்த தாய் வேண்டாள்;

செல்லாது அவன் வாயில் சொல் !

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

கல்வியறிவு இல்லாத மனிதனாக இருந்தாலும் அவனிடம் பொருட் செல்வம் இருக்குமேல் எல்லா மக்களும் சென்று அவனைப் பார்த்துப் போற்றிப் புகழ்வர் !

 

பொருள் இல்லாத மனிதனாக இருந்தால், அவனுக்கு மாலையிட்டு மணந்த மனைவியும் கூட விரும்பாள்; அவனை ஈன்றெடுத்த தாயும் விரும்பாள் !

 

பொருள் இல்லாத வறிய மனிதனின் சொல்லை இந்த உலகம் துளிக்கூட மதிக்காது; பிற மனிதர்கள் அவனை ஏளனமாகவே  பார்ப்பார்கள் ! 

 

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

------------------------------------------------------------------------------------------

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் = (ஒருவன்) படியாதவனே ஆயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால் ; எல்லாரும் சென்று எதிர்கொள்வர் = (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர் ; இல்லானை இல்லாளும் வேண்டாள் = (படித்தவனே ஆயினும் பொருள்) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள் ; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் = (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள் ;அவன் வாயில் சொல் செல்லாது = அவன் வாயிற் பிறக்கும் சொல்லானது பயன்படாது !

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------கல்லாதவனேயாயினும் பொருள் உடையவனை எல்லாரும் மதிப்பர்; கற்றவனே ஆயினும் பொருள் இல்லாதவனை ஒருவரும் மதியார் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

--------------------------------------------------------------------------------------------------------