வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

சாதி இரண்டொழிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி இரண்டொழிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (02) சாதி இரண்டொழிய வேறில்லை !


 கொடுப்பவர் உயர்குலம் ! கொடுக்காதவர் தாழ்குலம் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது  ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று  !  ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். நல்வழியை அருளிய ஔவையார் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (02) சாதி இரண்டொழிய வேறில்லை !

------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்

இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை சாற்றும்கால்

நீதி வழுவா நெறிமுறையில்மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி.

 

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

சாற்றுங்கால் = சொல்லப் போனால் ; மேதினியில் = பூமியில் ; சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை = இரண்டு சாதியின்றி வேறு இல்லை (அவ்விரண்டு சாதியாரும் யாவர் எனில்) ; நீதி வழுவா நெறி = நீதி தவறாத நல்வழியில் நின்று ; முறையின் = முறையோடு ; இட்டார் = (வறியர் முதலானவர்களுக்கு) ஈந்தவரே ; பெரியோர் = உயர்வாகிய சாதியார் ; இடாதார் = ஈயாதவரே ; இழிகுலத்தார் = இழிவாகிய சாதியார் ; பட்டாங்கில் உள்ளபடி = உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம் !

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

இந்தப் பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் இல்லை. இந்த இரண்டு சாதிகளும் எவை தெரியுமா


நீதி தவறாது நல்வழியில் நின்று, முறையோடு, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர் !


பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு உணவு கூடத் தராத, உதவி செய்கின்ற மனம் கருங்கிப் போன கருமிகள் இழிந்த சாதியினர். பட்டாங்கு எனப்படும் நீதி நூல்கள் குறிப்பிடும் இரண்டு சாதிகள் இவ்விரண்டே !

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

கொடுப்பவர் உயர்குலத்தினர் ; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி உலகில் வேறு சாதியில்லை !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedaa70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 26]

{10-01-2022}

------------------------------------------------------------------------------------------