வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

நீரும்நிழலும் நிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீரும்நிழலும் நிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (21) நீரும் நிழலும் நிலம் பொதியும் !

நெஞ்சில் வஞ்சமிலார்க்கு எல்லாம் கிடைக்கும் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (21) நீரு நிழலு நிலம்பொதியும்  !!

-----------------------------------------------------------------------------------------

நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்

பேரும் புகழும் பெருவாழ்வும்ஊரும்

வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றுந்

தருஞ்சிவந்த தாமரையாள் தான் !

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்

பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்

வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சம் இலார்க்கு என்றும்

தரும் சிவந்த தாமரையாள் தான் !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

சிவந்த தாமரையாள் = செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள் ; வஞ்சம் இல்லார்க்கு = வஞ்சனை இல்லாதவருக்கு ; நீரும் = நீர் வளத்தையும் ; நிழலும் = நிழல் வளத்தையும் ; நிலம் பொதியும் நெற்கட்டும் = நிலத்திலே நிறையும் நெற்போரையும் ; பேரும் = பேரையும் ; புகழும் = புகழையும் ; பெருவழ்வும் = பெரிய வாழ்வையும்ஊரும் = சீறூரையும் ; வரும் திருவும் = வளர்கின்ற செல்வத்தையும் ; வாழ்நாளும் = நிறைந்த ஆயுளையும் ; என்றும் தரும் = எந்நாளும் கொடுத்தருளுவள்.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

நெஞ்சில் வஞ்சனை இல்லாத நேர்மை மனிதர்களுக்கு, தாமரைச் செல்வியாம் திருமகள் நிறைந்த நீர் வளத்துடன் நில வளமும், நிலத்தில் விளையும் நெல் வளமும், குடியிருக்க அழகிய உறையுள் வளத்தையும் அருள்வாள் !

 

ஊரார் விதந்து போற்றும் வண்ணம் நற்பெயரையும், நல்லிசைப் பேற்றையும் வளமான வாழ்வையும், செழுமையான ஊரையும், வளர்கின்ற செல்வத்தையும் விரும்பி நல்கியருள்வாள் !

 

இவையன்றி, நோய் நொடி இல்லாத நிறைவான வாழ்நாளையும் நேர்த்தியாய்த் தந்தருள்வாள் நெடியோன் துணைவி, நேரிசைச் செல்வி பொய்கைப் பூவையாள் !


------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

வஞ்சனை இல்லாதவருக்கு இலக்குமியினது அருளால் எல்லா நலமும் உண்டாகும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

------------------------------------------------------------------------------------------