வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

முப்பதாம் ஆண்டளவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முப்பதாம் ஆண்டளவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (39) முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று !

மெய்ப்பொருளை அடைந்து இன்புற முயல்க !

------------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (39) முப்பதாம் ஆண்டளவில் !!

------------------------------------------------------------------------------------------

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்புங்

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே ஆகுமாம் மூப்பு !


------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

முப்பது ஆம் ஆண்டு அளவில் மூன்று அற்று ஒரு பொருளைத்

தப்பாமல் தன் உள் பெறான் ஆயின் செப்பும்

கலை அளவே ஆகும் ஆம் காரிகையார் தங்கள்

முலை அளவே ஆகும் ஆம் மூப்பு !


------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

ஒருவன் எத்துணை ஆழ்ந்து கல்வி கற்றாலும், அவனது முப்பதாம் அகவைக்குள்  ஆணவம், ன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் கடந்து  இறைவனை உணர வேண்டும்.  இல்லையேல், அவன் கற்ற கல்வி முதிர்ந்த பெண்ணின் மார்பகங்கள் போலப் பயனற்றதாகவே திகழும் !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

-----------------------------------------------------------------------------------------

முப்பது ஆம் ஆண்டு அளவில் = முப்பது அகவை அளவினிலேயே ; மூன்று அற்று = முக்குற்றமும் ஒழியப் பெற்று ; ஒரு பொருளை = உறுதிப் பொருளாகிய கடவுளை ; தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் = (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அநுபவ உணர்வால்) அடையான் ஆயின் ; காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் = அழகிய மாதர்கள் முதுமையில் (கணவனுடன் கூடி இன்பம் நுகர்தலன்றி) முலையினை உடையராதல் மாத்திரமே போல ; செப்பும் கலையளவே ஆகுமாம் = (அவள் முதுமையில் கணவனுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------   

மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப் பொருளை அடைந்து இன்புற முயல வேண்டும் !


------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,04]

{04-01-2022}

-----------------------------------------------------------------------------------------