வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

அம்மி துணையாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மி துணையாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (20) அம்மி துணையாக ஆறிழிந்த ஆறு !

அம்மிக் கல்லைக் கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கலாமா ?

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (20) அம்மி துணையாக  !!

-----------------------------------------------------------------------------------------

அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்

கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்இம்மை

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி

வெறுமைக்கு வித்தாய் விடும் !

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்

கொம்மை முலை பகர்வார்க் கொண்டாட்டம்இம்மை

மறுமைக்கும் நன்று அன்று மா நிதியம் போக்கி

வெறுமைக்கு வித்து ஆய்விடும் !

 

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

கொம்மை முலை = திரட்சி பொருந்திய தனங்களை ; பகர்வார்க் கொண்டாட்டம் = விற்கின்ற பரத்தையரை (இன்பங் காரணமாக) கொண்டாடுதல் ; அம்மி துணையாக = அம்மிக் கல்லே துணையாக ; ஆறு இழிந்தவாறு ஒக்கும் = ஆற்று வெள்ளத்திலே இறங்கிய தன்மையைப் போலும் ; (அன்றியும்) மாநிதியம் போக்கி = (அது) பெரிய செல்வத்தை அழித்து ; வெறுமைக்கு வித்து ஆய்விடும் = வறுமைக்குக் காரணம் ஆகிவிடும் ; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று = அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

அம்மிக் கல்லைத் தெப்பமாக்கி அதனைத் கொண்டு ஆற்றைக் கடக்க ஒருவன் முயன்றால், பொங்கிவரும் புதுப்புனலில் மூழ்கி  தன் பொன்னான உயிரையே  இழக்க வேண்டி நேரும் !  

 

அதுபோல், விலைமகளிரைத் தேடிச் சென்று இன்பம் நுகர முயன்றால் தன்னிடம் உள்ள செல்வம் அனைத்தையும் இழப்பதுடன் வறுமையின் கொடிய பிடிக்குள் அகப்பட்டுத் துன்பப்படவும்  நேரும் !

 

அஃதல்லாமல், விலைமகளின் தொடர்பு, அவனது இம்மை மறுமை இரண்டையுமே பாழ்படுத்தி அவனை நீங்காத் துயரத்தில் ஆழ்த்திவிடும் !

 

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

விலை மகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை அடையாமல், வறுமையையும், பழி பாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன்.

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

------------------------------------------------------------------------------------------