வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

சேவித்துஞ்சென்றிரந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேவித்துஞ்சென்றிரந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (19) சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர் !

ஒரு சாண் வயிற்றுக்காக என்னவெல்லாம் செய்கிறோம் !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (19) சேவித்துஞ் சென்றிரந்தும் !!

-----------------------------------------------------------------------------------------

சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல் கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம் !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

சேவித்தும், சென்று இரந்தும், தெள் நீர்க் கடல் கடந்தும்,

பாவித்தும், பார் ஆண்டும், பாட்டு இசைத்தும்போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம் !

 

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

சேவித்து = ஊழியம் செய்து

பாவித்து = பாசாங்கு செய்து

----------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம்:

நாழி = முற்காலத்தில் வழக்கிலிருந்து ஒரு முகத்தல் அளவைப் படி

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

வயிற்றின் கொடுமையால் = வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே ; சேவித்தும் = (பிறரைச்) சேவித்தும் ; சென்று இரந்தும் = (பலரிடத்தே) போய் யாசித்தும் ; தெள் நீர்க் கடல் கடந்தும் = தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும் ; பாவித்தும் = (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும் ; பார் ஆண்டும் = பூமியை ஆண்டும் ; பாட்டு இசைத்தும் = (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும் ; நாம் = நாம் ; உடம்பை = இந்த உடம்பினை ; நாழி அரிசிக்கே = நாழி அரிசிக்காகவே ; பாழின் = வீணிலே ; போவிப்பம் = செலுத்துகின்றோம்.

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

கூனிக் குறுகிப் பிறருக்குக் கும்பிடு போடுகிறோம்உடம்பை வளைத்துஅய்யா, அம்மாஎன்று இரந்து நிற்கிறோம்; கடல் கடந்து சென்று பொருள் ஈட்ட முனைகிறோம்; சிறிய மனிதரைக் கூடப் பெரிய மனிதராகப் பாவித்துக் கெஞ்சுகிறோம் !

 

செல்வந்தரைப் புகழ்ந்து, பாட்டுப் பாடிக் காசு சேர்க்கிறோம்; இந்தப் பூமியை ஆளும் மன்னவனாகவும் நடிக்கிறோம்; இவையெல்லாம் எதற்காக ? வயிற்றுப் பசியைத் தீர்க்கும் ஒரு படி அரிசிக்காக அல்லவா ? என்னே மனித வாழ்க்கை !

 

அரிதாகக் கிடைத்திருக்கும்  இந்த உடம்பினைப் பயன்படுத்தி, அறவழியில் செயல்பட்டு அனைவருக்கும் நன்மை கிடைக்கச் செய்யாமல், உடம்பினை எப்படியெல்லாம்  ஆட்டுவித்து வீணடிக்கிறோம் பாருங்கள் !

 

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

அரிதாகக் கிடைத்த மனித உடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

-----------------------------------------------------------------------------------------