வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

மானம் குலம் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மானம் குலம் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (26) மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை !

பசியால் துடிக்கும்போது மனிதன் விலங்காகிப் போகிறான்!

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல்: (26) மானம் குலம் கல்வி !

----------------------------------------------------------------------------------------

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை

தானந் தவமுயர்ச்சி தாளாண்மைதேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப்பறந்து போம் !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மைதேனின்

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம் !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

பசி வந்திட = பசி நோய் வந்தால் ; மானம் = மானவுணர்வும் ; குலம் = நற்குடியில் பிறந்தவன் என்னும் நினைவும் ; கல்வியும் = கற்ற கல்வியும் ; வண்மை = பிறருக்குக் கொடுத்துதவும் பண்பும் ; அறிவுடைமை = அறிவாற்றலும் ; தானம் = கொடைக்குணமும் ; தவம் = பற்றற்ற தன்மையும் ; உயர்ச்சி = உயர்வான எண்ணமும் ; தாளாண்மை = தொழில் முயற்சியும் ; தேனின் கசிவந்த  சொல்லியர் மெல் காமுறுதல் = இன்மொழி மங்கையர் மேல் காதல் கொள்ளல் ஆகிய ; பத்தும் பறந்து போம் = இப்பத்தும் விட்டோடிப் போம் !

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

பசி என்னும் கொடிய உணர்வு ஆட்டுவிக்கும் போது, ஒருவன் உணவு தேடுவதிலேயே குறியாக இருப்பான்; தன் மானம் அழிந்து போவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்; தன் குடிப்பிறப்பின் பெருமை சீர்குலைவதைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டான் !

 

கல்வி தனக்குக் கற்றுக்கொடுத்த பண்புகளின் வீட்சி  பற்றி சிந்திக்கமாட்டான்; பிறருக்குக் கொடுத்து உதவும் குணத்தைப் பற்றிய எண்ணம் இராது ; அறிவாற்றல் கெடுவதைப் பற்றிய கவலை இராது !

 

கொடைக்குணம் மறைந்து போகும்;  பற்றற்ற தன்மை பறந்து போகும்; உயர்ந்த எண்ணங்கள் உருக்குலைந்து போகும்; உழைத்து உணவுக்கு வழி தேடும் முயற்சிகளைக் கைவிடுவான் !

 

இன்மொழி மங்கையின் மேல் கொண்ட காதல் காற்றில் கரைந்துவிடும்; பசிக் கொடுமை  வந்துவிட்டால் மனிதன், மனிதப் பண்புகளை எல்லாம் இழந்து, விலங்கினும் கீழாக மாறிப் போகிறான் ! பசி நோயினும் கொடிது பிறிதில்லை !

 

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

மானம் முதலிய எல்லா நலன்களையும் கெடுத்தலினாலே பசி நோயினும் கொடிது பிறிதில்லை !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022)

-----------------------------------------------------------------------------------------