வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

தண்ணீர் நிலநலத்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்ணீர் நிலநலத்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (16) தண்ணீர் நில நலத்தால், தக்கோர் !

பரிவுக் குணம் மனிதனுக்கு மாண்பைச் சேர்க்கிறது !

------------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (16) தண்ணீர் நில நலத்தால் !

------------------------------------------------------------------------------------------

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண்ணீர்மை மாறாக் கருணையால்பெண்ணீர்மை

கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த  வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

தண்ணீர் நில நலத்தால்; தக்கோர் குணம் கொடையால்;

கண் நீர்மை மாறாக் கருணையால்; - பெண் நீர்மை

கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி !

 

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

கருணை = அருள்

அற்புதம் = வியப்பு, மேன்மை

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

தண்னீர் நில நலத்தால் = தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும் ; தக்கோர் குணம் கொடையால் = நல்லோருடைய குணமானது ஈகையினாலும் ; கண்ணீர்மை மாறாக் கருணையால் = கண்களுடைய குணமானது  நீங்காத அருளினாலும் ; பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் = பெண்களுடைய குணமானது கற்பு நிலை கெடாத வழியினாலும் ; கடல் சூழ்ந்த வையகத்துள் = கடல் சூழ்ந்த பூமியினிடத்து ; அற்புதம் ஆம் = வியக்கத் தக்க மேன்மை உடையன ஆகும் ; என்று அறிஎன்று நீ அறிவாயாக !

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் இயல்பும் சுவையும் அமைகிறது என்பதால், நிலத்தினால் நீருக்குப் பெருமை உண்டாகிறது !

 

ஈகைத் தன்மையே மனிதனை முழு மனிதனாக்குகிறது என்பதால், ஈகைக் குணத்தால் மனிதனுக்குப் பெருமை உண்டாகிறது !

 

கண்களில் ஒளிரும் பரிவு மனப்பான்மையே மனிதப் பிறவிக்கு மாண்பைச் சேர்க்கிறது என்பதால், பரிவுணர்வால்  கண்களுக்குப் பெருமை உண்டாகிறது !

 

கற்பு என்னும் மனவுறுதி தான்  பெண்ணின் இயல்பினை வரையறை செய்கிறது என்பதால், கற்பு ஒழுக்கத்தால் பெண்ணிற்குப் பெருமை உண்டாகிறது !

 

கடலால் சூழப்பெற்ற இவ்வுலகில் வியக்கத்தக்க மேன்மையுடையவை இவைதான் என்பதை ஏ ! மனிதா ! நீ அறிவாயாக !

 

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும் !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

-----------------------------------------------------------------------------------------