வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

ஆற்றுப் பெருக்கற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆற்றுப் பெருக்கற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (09) ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் !

வற்றிவிட்டாலும் கூட ஆறுஊற்று  நீரை உலகுக்கு அளித்து உதவுகிறது !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

--------------------------------------------------------------------------------------

பாடல் (09) ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் !

--------------------------------------------------------------------------------------

ஆற்றுப்   பெருக்கற்    றடிசுடு  மந்நாளு  மவ்வாறு

ஊற்றுப்   பெருக்கால்  உலகூட்டும்  -  ஏற்றவர்க்கு

நல்லகுடிப்  பிறந்தார்  நல்கூர்ந்த   ரானாலும்

இல்லையென  மாட்டா    ரிசைந்து.

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு

ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்  -  ஏற்றவர்க்கு

நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.


-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

பெருக்கு = நீர்ப் பெருக்கு அற்று = வறண்டுபோய் அடி சுடும் = நடப்போர்  பாதங்களை மணல் சுடுகின்ற ஊற்று = ஆற்று மணலிடையே தோண்டப் பெறும் கிணறு போன்ற பள்ளம் உலகு ஊட்டும் = மக்களின் தாகத்தைத் தணிக்கும் ஏற்றவர்க்கு = இரவலர்களுக்கு நல்ல குடிப் பிறந்தார் = உயர்ந்த குடியில் பிறந்த மனிதர்கள் நல்கூர்ந்தார் = வறியவர்கள்; (நல்குரவு = வறுமை) இசைந்து = மனம் ஒப்பி.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

தண்ணீர் வற்றிக் கோடை வெப்பத்தால் கால் சுடும் அளவிற்கு எங்கும் மணல்வெளியாக மாறிப் போனாலும்கூட, அதைத் தோண்டுவோருக்கு, ஊற்று நீரைக் கொடுத்து இந்த உலகதிற்கு உதவுகிறது  ஆறு !

 

தைப்போல நற்குடியிற் பிறந்தவர்கள், தம் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்திலும் கூட, இரவலர்களுக்கு (பிச்சை எனக் கேட்போர்) மனமிசைந்து இல்லைஎனச் சொல்ல மாட்டார்கள். இயன்றதைத் தருவர்!

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 24]

{08-01-2022}

------------------------------------------------------------------------------------------