வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

உண்பது நாழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்பது நாழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (28) உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் !


உள்ளதே போதும் என மன அமைதி கொள்க !

---------------------------------------------------------------------------------------------------

ஔவையார்  அருளிச் செய்த நல்வழி என்னும் நூலிலிருந்து  ஒரு அருமையான பாடல். மனித வாழ்க்கையில் மன அமைதியின் தேவையை வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.

-----------------------------------------------------------------------------------------

பாடல் (28) உண்பது நாழி  உடுப்பது !

-----------------------------------------------------------------------------------------

உண்பது நாழி ! உடுப்பது நான்கு முழம் !

எண்பது கோடி நினைந்து எண்ணுவன  -  கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான் !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண் புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம் போலச்

சாம் துணையும் சஞ்சலமே தான் !

 

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

நாழி =  முற்காலத்தில் வழக்கில் இருந்த ஆழாக்கு என்னும் முகத்தல் அளவை. ; நினைந்து எண்ணுவன எண்பது கோடி = நினைத்து என்னும் காரியங்களோ எண்பது கோடி (அதாவது பற்பல என்று பொருள்) ; கண் புதைந்த = அகக்கண் குருடாக இருக்கிற ; மண்ணின் கலம் = மண்ணால் செய்யப்பட்டு சூளையில் வேகவைக்கப் பெற்ற பானை, சட்டி போன்றவை ; சாந்துணையும் = சாகும் வரையிலும் ; சஞ்சலமே = (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது !

 

------------------------------------------------------------------------------------------

வடசொல்:

சஞ்சலம் = மனக்கவலை

------------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம்:

------------------------------------------------------------------------------------------

நாழி = முற்காலத்தில் வழக்கிலிருந்த முகத்தல் அளவைக் கருவி. இதைப் படிஎன்பார்கள்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------------------------------------------------------------------------------

மனிதன் உண்பதற்கு நாழியளவுச் சோறும் உடுப்பதற்கு நான்கு முழத் துணியும்   தேவை ! இந்த அளவை விஞ்சி அவனால் துய்க்க முடியாது !

 

த்தகைய  சிறிய தேவையுள்ள மனிதனின்  மனதில் எண்பது கோடி விழைவுகள் (ஆசைகள்) தோன்றி அவனை ஆட்டுவிக்கின்றன !

 

வீணான விழைகளுக்கு இடம் தந்து சிந்திக்கும் திறனை இழக்கும் மனிதன் இருப்பதை வைத்துக் கொண்டு நிறைவாக வாழத் தெரியாமல் துன்பப்படுகிறான் !

 

அவனது அகக் கண் குருடாகிப் போகிறது. இதனால் அவன் வாழ்க்கையானது  எளிதில் உடைந்து விடும் மண் கலம் போன்று சாகும் வரை அவனுக்குத் துன்பம் அளிப்பதாகவே  அமைந்து விடுகிறது !

 

----------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------       

உள்ளதே போதும் என மனம் அமைதி  பெறாதவர்கள் இறக்கும் வரையில் மனக் கவலையே அடைவார்கள் !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

-----------------------------------------------------------------------------------------