வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

நண்டுசிப்பி வேய்கதலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்டுசிப்பி வேய்கதலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (36) நண்டு சிப்பி வேய் கதலி !

பிறன் மனைவி மேல் அவாக் கொள்ளல் அழிவுக்கு வித்தாகும் !

------------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

 

------------------------------------------------------------------------------------------

பாடல்.36. நண்டு சிப்பி, வேய், கதலி !

-----------------------------------------------------------------------------------------

நண்டுசிப்பி  வேய்கதலி  நாசமுறுங்  காலத்தில்

கொண்ட  கருவளிக்குங்  கொள்கைபோல் - ஒண்டொடீ

போதந்  தனங்கல்வி  பொன்றவருங்  காலமயல்

மாதர்மேல்  வைப்பார்  மனம்.

 

---------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

நண்டு, சிப்பி, வேய், கதலி, நாசம் உறும் காலத்தில்

கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண் தொடீ

போதம், தனம், கல்வி பொன்ற வரும் காலம் அயல்

மாதர் மேல் வைப்பார் மனம் !

 

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

----------------------------------------------------------------------------------------

ஒண் தொடீ ! = ஒளி பொருந்திய வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணே ! நண்டு = நீரில் வாழும் நண்டுசிப்பி = கடலில் வாழும் முத்துச் சிப்பிவேய் = மூங்கில்கதலி = வாழை நாசமுறும் காலத்தில் = தாம் அழிவை அடையும் காலத்திலேகொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் = (முறையே தாம்) கொண்ட (குஞ்சும், முத்தும், அரிசியும், காய்க் குலையும் ஆகிய கருக்களை ஈனும் தன்மை போல ; (மனிதர்கள்) போதம், தனம், கல்வி பொன்ற வரும் காலம் = ஞானமும், செல்வமும், கல்வியும் அழிய வரும் காலத்திலே ; அயல் மாதர் மேல் மனம் வைப்பார் = பிற மகளிர் மேல் அவாக் கொண்டு அவர்களை அடைய முயல்வார்கள் !


---------------------------------------------------------------------------------------

வடசொல்:

நாசம் = அழிவு

போதம் = ஞானம்

தனம் = செல்வம்

மாதர் = மகளிர்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

தாய் ஈன்ற குட்டி நண்டுகள், தாயையே தின்று வளரும். சிப்பிகள் உடைந்த பின்பே அவற்றின் வயிற்றிலிருந்து முத்துக்கள் பிறக்கும். மூங்கில் தூர்களில்  அரிசி (மூங்கிலரிசிவிளைந்த பின் அவை பட்டுப்போகும். வாழை மரம் தார் ஈன்றபின் தாய் வாழை மடிந்து போகும்  ! இவையெல்லாம் தாம் கொண்ட கருக்களை ஈனும் காலத்தில் அழிந்து போகின்றன.

 

அதுபோல், தாம் பெற்ற அறிவு, செல்வம், கல்வி ஆகிய அனைத்தும் அழிந்து போகும்  காலத்தில்தான்  ஆடவர் அயலார் வீட்டுப் பெண்கள் மேல் தவறான அவாக் கொள்வர்!

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------   

ஒருவன் தன் மனைவியை அன்றி பிற மகளிரின் மேல் ஆசை வைத்தால், அஃது அவனிடத்து உள்ள ஞானம், செல்வம், கல்வி என்னும் மூன்றும் கெடுதற்கு அறிகுறியாகும் !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,21]

{05-01-2022}

-------------------------------------------------------------------------------------------------------