திருக்குறள் முதலியவை பொருள் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் !
----------------------------------------------------------------------------------------
நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ்
மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம்
நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
----------------------------------------------------------------------------------------
பாடல் (40) தேவர் குறளும் திருநான்மறை !
----------------------------------------------------------------------------------------
தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர் !
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
தேவர் குறளும். திரு நான்மறை
முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் –
கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் !
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
தமிழ் மறை ஆசான் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளும், நான்கு மறை நூல்களும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவாரமும், மாணிக்கவாசகப் பெருமானின் திருக்கோவையார், திருவாசகங்களும், திருமூலரின் திருமந்திரமும் எடுத்துரைக்கும் மெய்ப்பொருள் ஒன்றே ! வெவ்வேறல்ல என்பதை நீ உணர்வாயாக !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்;
-----------------------------------------------------------------------------------------
தேவர் குறளும் = திருவள்ளுவ
நாயனாருடைய திருக்குறளும் ; திரு நான்மறை முடிவும் = சிறப்புப் பொருந்திய நால்வேதங்களின் கருத்தும் ; மூவர்
தமிழும் = அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருடைய தேவாரமும் ; முனிமொழியும் =
வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய திருக்கோவையார், திருவாசகங்களும்
; திருமூலர் சொல்லும் = திருமூல
நாயனாருடைய திருமந்திரமும், ஒருவாசகம் என்று உணர் = ஒரு பொருளையே குறிப்பன என்று உணர்வாயாக !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருள் முடிவு வேறுபடாத
மெய்ந்நூல்கள் என்பதாம் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,20]
{04-01-2022}
------------------------------------------------------------------------------------------