வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

ஆற்றங்கரையின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆற்றங்கரையின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (12) ஆற்றங் கரையின் மரமும் அரசறிய !

உழவுத் தொழிலுக்கு இவ்வுலகில் ஒப்பு ஏதுமில்லை !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (12) ஆற்றங்கரையின் மரமும் !

----------------------------------------------------------------------------------------

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றேஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு !

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய

வீற்று இருந்த வாழ்வும் விழும் அன்றேஏற்றம்

உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்

பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

ஆற்றங் கரையின் மரமும் = ஆற்றின் கரையிலுள்ள மரமும் ; அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் = அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும் = விழும் அன்றே = அழிந்துவிடும் அல்லவா ? ; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் = உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும் ; அதற்கு ஒப்பு இல்லை = அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை ; வேறு ஓர் பணிக்கு = வேறு வகையான தொழில் வாழ்க்கை எல்லாம் ; பழுதுண்டு = தவறு உண்டு.

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

ஆற்றின் கரையோரத்தில் உயர்ந்து வளர்ந்து நிற்கின்ற மரம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி வந்தால் வேருடன் பறிந்து வீழ்ந்துபோகும்; அதன் வாழ்வு  நிலையில்லாதது !

 

அதுபோல், அரசன் அறியும் படியாகப்  பெருமையாக வாழ்கின்ற எந்தவொரு மனிதனின் வாழ்வும் அரசனின் பொறாமைக்கு இலக்காகி வீழ்ந்துபோகும்; அவன் வாழ்வும் நிலையில்லாதது !

 

ஆனால், வீழ்ச்சியில்லாத, நிலையான,  உயர்வான வாழ்க்கை, உழுதுண்டு வாழ்கின்ற உழவனின் வாழ்க்கையே ஆகும். அவ்வாழ்க்கைக்கு இவ்வுலகில் நிகர் வேறேதுமில்லை !

 

வேறு வகையான தொழில் செய்வோர்  வாழ்க்கை எல்லாம் வீழ்ச்சிக்கு இலக்காவதும் உண்டு; உழவுத் தொழிலுக்கு ஒப்பாவதும் இல்லை !

 

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

உழுது பயிர் செய்து வாழும் வாழ்க்கையே குற்றமற்றதும், அழிவில்லாததும், தன்னுரிமை சார்ந்ததும் ஆகும்.

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

-----------------------------------------------------------------------------------------