வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

பிச்சைக்கு மூத்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிச்சைக்கு மூத்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (14) பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை !

பிறரிடம் பல்லைக் காட்டிக் கேட்டு வாங்குதல் இழிவு !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (14) பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை !

----------------------------------------------------------------------------------------

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்

இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர்விடுகை சால வுறும் !

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்

இச்சை பல சொல்லி இடித்து உண்கைசிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர் விடுகை சால உறும் !

 

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

இச்சை = நைச்சியம் ; விருப்பம்

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

பேசுங்கால் = சொல்லுமிடத்து ; பிச்சைக்கு மூத்த குடிவழ்க்கை = பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கையாவது ; பல இச்சை சொல்லி இடித்து உண்கை = பலவாகிய இச்சைகளைப் பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம் ; சிச்சீசீச்சீ (இது என்ன செய்கை) ; வயிறு வளர்க்கைக்கு = இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும் ; மானம் அழியாது = மானங் கெடாமல் ; உயிர் விடுகை = உயிரை விடுதல் ; சால உறும் = மிகவும் பொருந்தும்.

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

பிச்சை எடுத்து உண்டலினும் பெரிய இழிவுடைய குடிவாழ்க்கை  என்பது பல்லைக் காட்டி நைச்சியமாக பேசி ஒருவரை நெருங்கி,  கேட்டு வாங்கி உண்ணுதலாகும் !

 

சீச்சீ ! இது என்ன இழிவான வாழ்க்கை ! இப்படி நெளிந்து குழைந்து பேசி வயிறு வளர்ப்பதைக் காட்டிலும் மானம் கெடாமல் உயிரை விடுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும் !

 

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரைவிட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23

{07-01-2022}

------------------------------------------------------------------------------------------