மெய்ப்பொருளை அடைந்து இன்புற முயல்க !
------------------------------------------------------------------------------------------
நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ்
மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம்
நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
------------------------------------------------------------------------------------------
பாடல் (39) முப்பதாம் ஆண்டளவில் !!
------------------------------------------------------------------------------------------
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று
ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் – செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு !
------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
முப்பது ஆம் ஆண்டு அளவில் மூன்று
அற்று ஒரு பொருளைத்
தப்பாமல் தன் உள் பெறான் ஆயின் – செப்பும்
கலை அளவே ஆகும் ஆம் காரிகையார் தங்கள்
முலை அளவே ஆகும் ஆம் மூப்பு !
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
ஒருவன் எத்துணை
ஆழ்ந்து கல்வி கற்றாலும்,
அவனது முப்பதாம் அகவைக்குள்
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் கடந்து
இறைவனை உணர வேண்டும். இல்லையேல், அவன் கற்ற
கல்வி முதிர்ந்த பெண்ணின் மார்பகங்கள் போலப் பயனற்றதாகவே திகழும் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்;
-----------------------------------------------------------------------------------------
முப்பது ஆம் ஆண்டு அளவில் = முப்பது அகவை
அளவினிலேயே ; மூன்று அற்று = முக்குற்றமும்
ஒழியப் பெற்று ; ஒரு பொருளை = உறுதிப் பொருளாகிய
கடவுளை ; தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் = (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அநுபவ
உணர்வால்) அடையான் ஆயின் ; காரிகையார்
தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் = அழகிய மாதர்கள்
முதுமையில் (கணவனுடன் கூடி இன்பம் நுகர்தலன்றி) முலையினை உடையராதல் மாத்திரமே போல ; செப்பும்
கலையளவே ஆகுமாம் = (அவள் முதுமையில் கணவனுடன் கூடி இன்பம்
நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று
மெய்ப் பொருளை அடைந்து இன்புற முயல வேண்டும் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,04]
{04-01-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக