வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (அ.உ) நல்வழி பற்றிய அறிமுக உரை !

ஔவையார் அருளிய

**** நல்வழி ****

------------------------------------------------------------------------------------------

***** அறிமுக உரை *****

------------------------------------------------------------------------------------------

 

தமிழுக்கு வளம் சேர்த்த பண்டைய புலவர்களுள் ஔவையார் என்னும் நல்லிசைப் புலவரும் அடங்குவர். ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது இலக்கியம் அறிந்த சான்றோர்களின் துணிபு !

 

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்றவை, ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் சில. இவற்றுள் நல்வழி என்னும் நூலுக்கு எளிய தெளிவுரை எழுதி தமிழன்பர்கள் சுவைப்பதற்காகப் படைத்திருக்கிறேன் !

 

நல்வழி என்னும் நீதி நூலைப் படைத்த ஔவையார் கி.பி. 9 –ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது தமிழறிஞர்கள் ஆய்ந்துணர்ந்த முடிவு !

 

சங்க காலம் என்பது கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம். இதற்குப் பிற்பட்ட 500 ஆண்டுகள் சங்கம் மருவிய காலம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் வடமொழியும் ஆரியர்களின் கடவுட் கொள்கையும் மெல்ல மெல்லத் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது எனலாம் !

 

கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் சொற்களும், ஆரியர்களின் இறைக் கொள்கையும் இடம்பெறத் தொடங்கின. ஔவையார் இயற்றிய நல்வழியிலும் இது எதிரொளிக்கிறது !

 

நீதிக் கருத்துகளைத் தம் பாடல்களில் சொல்லும் ஔவையார் புண்ணியம், பாவம், வினைப்பயன், விதி போன்ற கருத்துகளையும் சில பாடல்களில் புகுத்தியிருக்கிறார். வாழ்வியல்நீதி என்னும்  கருத்து  இலக்கு நோக்கி நடைபயிலத் தொடங்கிய அவர் ”நல்வழி”யிலிருந்து சற்று விலகி ஆரியர்களின் கருத்துகளை நோக்கிய கிளை வழியில் ஏன் உலாச் சென்றார் என்பது ஆய்வுக்குரியது !

 

இஃதன்றி, ”சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு…” (15), “முப்பதாம் ஆண்டளவில்….”(39), தேவர் குறளும், திருநான்மறை முடிவும்….”(40) போன்ற சில பாடல்கள் ஔவையார் இயற்றியவைதானா இவை என்னும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன ! ஓலைசுவடியிலிருந்து எடுத்தெழுதி நூல் வடிவில் பதிப்பித்தவர்களின் சொந்தக் கருத்தும் ஆங்கங்கே புகுத்தப்பட்டிருக்கலாம் என்னும் கூற்றையும் புறந் தள்ளுவதற்கில்லை !

 

”சாதி இரண்டொழிய..’, “ஆற்றுப் பெருக்கற்று…”, ”பாடுபட்டுத் தேடி…”, “மரம் பழுத்தால்…”, “ஆறிடும் மேடும்….” போன்ற நெஞ்சில் நிறைந்த செய்யுள்களை முழுமையாக மீண்டும் படித்து இன்புறும் வாய்ப்பை நல்கியிருக்கிறேன். தமிழ்கூரும் நல்லுலகம் படித்து இன்புறுமாக !


------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051 : சிலை (மார்கழி) 26]

{10-01-2022}

-----------------------------------------------------------------------------------------                

திங்கள், 10 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (இ.வ) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் !

ஆனைமுகனே ! பாலும் தேனும் உனக்குத் தருகிறேன்; எனக்குத் தமிழில் வல்லமை தா !

------------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! இதோ அந்த இறை வணக்கப் பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல் (.). பாலும் தெளி தேனும் பாகும் !

------------------------------------------------------------------------------------------

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா !


------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம் செய்

துங்கக் கரி முகத்துத் தூ மணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா !


------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

கோலம் செய் = அழகினைச் செய்கின்ற ; துங்கம் = உயர்வாகிய ; கரிமுகத்து = யானை முகத்தையுடைய  ; தூ மணியே = தூய்மையான செம்மணி போன்ற ஆனை முகக் கடவுளே ! பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் = ஆவின் பாலும் தெளிந்த தேனும், வெல்லப் பாகும், பாசிப் பருப்பும் ஆகிய ; இவை நாலும் கலந்து = இந்நான்கையும் கலந்து ; நான் உனக்குத் தருவேன் = அடியேன் நினக்கு அளித்துப் பூசை செய்வேன் ; சங்கத் தமிழ் மூன்றும் = சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும் ; நீ எனக்குத் தா பிள்ளையாரப்பா எனக்குத் தந்தருள்வீராக !


------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

அழகிய செம்மணி போன்ற ஆனை முகக் கடவுளேநினக்கு ஆவின் பாலும் தெளிந்த தேனும், வெல்லப் பாகும், பாசிப் பருப்பும் ஆகிய இந்நான்கையும் கலந்து  அளித்துப் பூசை செய்வேன் !


எனக்கு நின் அருள் வேண்டுமப்பா ! முதல் இடை, கடை என்னும் மூன்று சங்கங்கங்களால் வளர்க்கப்பட்ட இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் எனக்குச் சிறந்த புலமையைத் தந்தருள்வாய் ஆனைமுகனே !


------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

ஆனைமுகக் கடவுளே ! எனக்கு முத்தமிழிலும் நல்ல புலமையைத் தந்தருள்வாயாக !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) ,26]

{10-01-2022}

 -----------------------------------------------------------------------------------------

 

 

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (01) புண்ணியம் ஆம், பாவம் போம் !

நல்வினைகளைச் செய்தால் வாழ்வில் வளர்ச்சி எற்படும் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல்(01). புண்ணியம் ஆம் பாவம் போம் !

------------------------------------------------------------------------------------------

புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை

மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்

தீதொழிய நன்மை செயல்.

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால்

ஈது ஒழிய வேறு இல்லை எச் சமயத்தோர் சொல்லும்

தீது ஒழிய நன்மை செயல்.

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

புண்ணியம் ஆம் = அறமானது வளர்ச்சியைக் கொடுக்கும் ; பாவம் போம் = பாவமானது அழிவினைச் செய்யும் ; போன நாள் செய்த அவை = முற்பிறப்பில் செய்த அப் புண்ணிய பாவங்களே ; மண்ணில் பிறந்தார்க்கு = பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு ; வைத்த பொருள் = (இப்பிறப்பிலே இன்ப துன்பங்களைத் துய்க்கும்படி) வைத்த பொருளாகும் ; எண்ணுங்கால் = ஆராய்ந்து பார்க்கின் ; எச்சமயத்தோர் சொல்லு = எந்த மத்த்தினர் சொல்லுவதும் ; ஈது ஒழிய வேறு இல்லை = இதுவன்றி வேறில்லை ; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் = பாவம் செய்யாது புண்ணியமே செய்க.

 

------------------------------------------------------------------------------------------

வடசொற்கள்;

புண்ணியம் = நல்வினை.

பாவம் = தீவினை

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

நல்வினைகளைச் செய்தால் வாழ்வில் வளர்ச்சி எற்படும்; தீவினைகள் செய்தால் தளர்ச்சி ஏற்படும்


பூமியில் பிறந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்நாள் வரைச் செய்துள்ள நல்வினை தீவினைகளே அவர்களது எஞ்சிய வாழ்வை முடிவு செய்கிறது !

 

ஆராய்ந்து பார்த்தால், எந்த சமயமாக இருந்தாலும் அது எடுத்துரைக்கும் கருத்து இதுதானே அன்றி வேறில்லை


ஆகையால் மானிடர்களே, தீவினைகளைத் தவிர்த்து நல்வினைகளைச் செய்வீர்களாக !

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

நல்வினையால் இன்பமும் தீவினையால் துன்பமும் உண்டாவதால், தீவினைகள் செய்வதைக் கைவிட்டு நல்வினைகளைச் செய்வீர்களாக !

 

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) 26]

{10-01-2022}

------------------------------------------------------------------------------------------

 

 

 

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (02) சாதி இரண்டொழிய வேறில்லை !


 கொடுப்பவர் உயர்குலம் ! கொடுக்காதவர் தாழ்குலம் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது  ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று  !  ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். நல்வழியை அருளிய ஔவையார் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (02) சாதி இரண்டொழிய வேறில்லை !

------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்

இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை சாற்றும்கால்

நீதி வழுவா நெறிமுறையில்மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி.

 

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

சாற்றுங்கால் = சொல்லப் போனால் ; மேதினியில் = பூமியில் ; சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை = இரண்டு சாதியின்றி வேறு இல்லை (அவ்விரண்டு சாதியாரும் யாவர் எனில்) ; நீதி வழுவா நெறி = நீதி தவறாத நல்வழியில் நின்று ; முறையின் = முறையோடு ; இட்டார் = (வறியர் முதலானவர்களுக்கு) ஈந்தவரே ; பெரியோர் = உயர்வாகிய சாதியார் ; இடாதார் = ஈயாதவரே ; இழிகுலத்தார் = இழிவாகிய சாதியார் ; பட்டாங்கில் உள்ளபடி = உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம் !

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

இந்தப் பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் இல்லை. இந்த இரண்டு சாதிகளும் எவை தெரியுமா


நீதி தவறாது நல்வழியில் நின்று, முறையோடு, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர் !


பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு உணவு கூடத் தராத, உதவி செய்கின்ற மனம் கருங்கிப் போன கருமிகள் இழிந்த சாதியினர். பட்டாங்கு எனப்படும் நீதி நூல்கள் குறிப்பிடும் இரண்டு சாதிகள் இவ்விரண்டே !

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

கொடுப்பவர் உயர்குலத்தினர் ; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி உலகில் வேறு சாதியில்லை !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedaa70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 26]

{10-01-2022}

------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (03) இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு !


மனித உடம்பு துன்பமெனும் பொருளை இட்டு வைக்கும் பையல்லவோ !

-----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

----------------------------------------------------------------------------------------

பாடல் (03). இடும்பைக்கு இடும்பை !

-----------------------------------------------------------------------------------------

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே.

இடும்பொய்யை மெய்யென் றிராதே இடுங்கடுக

உண்டாயி னுண்டாகு ஊழிற் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------

இடும்பைக்கு இடும் பை  இயல் உடம்பு இது அன்றே

இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

 

-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இயல் உடம்பு இது = பொருந்திய இவ்வுடம்பானது ; இடும்பைக்கு = துன்பமாகிய சரக்குகட்கு ; இடும்பை அன்றே = இட்டு வைக்கும் பை அல்லவா ; இடும் பொய்யை = (உணவினை) இடுகின்ற நிலையில்லாத  இவ்வுடம்பை ; மெய் என்று இராது = நிலையுடையது என்று கருதியிராமல் ; கடுக = விரைவில் ; இடும் = வறியார்க்கு ஈயுங்கள் ; உணடாயின் = (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின் ; பெருவலி நோய் = மிக்க வலிமை உடைய பாசமாகிய பிணியினின்று ; விண்டாரை = நீங்கியவரை ; கொண்டாடும் = விரும்புகின்ற ; வீடு = முத்தியானது ; ஊழின் = முறையாலே ; உண்டாகும் = உங்கட்குக் கிடைக்கும்.

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

மனித உடம்பானது துன்பமெனும் பண்டங்களை இட்டு வைக்கும் பையல்லவா? நிலையில்லாத இவ்வுடம்பை, நிலையுடையதென்று கருதி வாளாவிராமல், ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் இயன்றதைச் செய்யுங்கள் . இத்தகைய நல்லறம் உங்களிடத்து உண்டாயின், பந்தபாசம் என்னும் பிணியினின்றும் நீங்கியவரை விரும்புகின்ற வீடு பேறானது உங்கட்குக் கிடைக்கும் !


-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடு பேறு உண்டாகும் !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை, (மார்கழி) 25]

{09-01-2022}

------------------------------------------------------------------------------------------

 

 

 

 

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (04) எண்ணி ஒரு கருமம்

காலம் நேரம் கூடிவந்தால் தான் எந்தச் செயலும் நடக்கும் !

----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

----------------------------------------------------------------------------------------

பாடல் (04). எண்ணி ஒரு கருமம் யார்க்கும் !

-----------------------------------------------------------------------------------------

எண்ணி ஒரு கருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது

புண்ணியம் வந்தெய்து போதல்லாற் கண்ணில்லான்

மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே

ஆங்கால மாகு மவர்க்கு.

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய் ஒண்ணாது

புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண்ணில்லான்

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே

ஆம் காலம் ஆகும் அவர்க்கு.


------------------------------------------------------------------------------------------

வடசொல்:

புண்ணியம் = நல்வினை

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

யார்க்கும் = எத்தன்மையோர்க்கும் ; புண்ணியம் வந்து எய்து போது அல்லால் = (முன் செய்த) நல்வினைகள் வந்து கூடும்போது அல்லாமல் ; ஒரு கருமம் = ஒரு செயலை ; எண்ணி = ஆலோசித்து ; செய்யொண்னாது = செய்து முடிக்க இயலாது ; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான் = குருடன் ; மாங்காய் விழ = மாங்காயை விழுவித்தற்கு ; எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் = எறிந்த மாத்திரைக் கோலைப் போலும் ; ஆம் காலம் = நல்வினை வந்து கூடும்போது ; அவர்க்கு ஆகும் = அவர்க்கு அச்செயல் எளிதில் முடியும்.

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

ஒருவன் நல்வினைகள் செய்திருந்தால் ஒரு செயலை நிறைவேற்றுவதற்கான நேரம் கூடிவந்து அவனுக்குக் கைக்கொடுக்கும் ! காலம் கூடிவரவில்லையேல் அச்செயலை அவனால் நிறைவேற்ற முடியாது !

 

காலம் கைக்கூடாத போது அதை நிறைவேற்ற முயன்றால் கையில் உள்ளதையும் அவன் இழக்க வேண்டி வரும் ! அவன் செயல் கண்ணில்லாத குருடன் மந்திரக் கோலை வீசி  மாங்காயை விழச் செய்ய முயல்வதற்கு ஒப்பாக அமையும் !

 

வேளை கூடிவரும் வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலைத் தொடங்க வேண்டும் !

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

நல்வினை செய்யாதவன் செய்யத் தொடங்கிய செயல் முடியப் பெறாத்து மட்டுமல்ல  கைப்பொருளும் இழப்பன்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) 25]

{09-01-2022}

-----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (05) வருந்தி அழைத்தாலும் வாராத வாரா !

விரும்பி அழைப்பதால் இறப்பு வந்துவிடாது !

------------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல்(05) .வருந்தி அழைத்தாலும் வாராத வாரா !

------------------------------------------------------------------------------------------

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமினென்றாற் போகா இருந்தேங்கி

நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில் !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா;

பொருந்துவன போமின் என்றால் போகா; - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில் !

 

------------------------------------------------------------------------------------------

வடசொல்:

தூரம் = தொலைவு

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

வாராத = (ஊழால்) வரக் கூடாதவைகள் ; வருந்தி அழைத்தாலும் = பரிந்து அழைப்பினும் ; வாரா = வாராவாம் ; பொருந்துவன = (ஊழால்) வரக்கூடியவை ; போமின் என்றால் = போயிடுங்கள் என வெறுப்பினும் ; போகா = போகாவாம் ; இருந்து ஏங்கி = (இவ்வுண்மை அறியாமல்) இருந்து ஏக்கமுற்று ; நெஞ்சம் புண்ணாக = மனம் புண்ணாகும்படி ; நெடுந்தூரம் தாம் நினைந்து = (அவற்றை) தாம் நெடுந்தூரம் சிந்தித்து ; துஞ்சுவதே = மாண்டுபோவதே ; மாந்தர் தொழில் = மனிதர் தொழிலாக உள்ளது.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையில் ஒருவன் வெறுப்புற்று இறப்பு தன்னைத் தழுவட்டும் என்று வருந்தி வருந்தி  இறப்பைக் கூவி அழைத்தாலும், இறப்புக்கான நேரம் வராத வரை அது  வந்துவிடாது !

 

இருக்கின்ற செல்வங்கள் போதும், இனிமேல் எனக்குச் செல்வமே வேண்டாம் என்று வெறுப்புற்று விலக்கினாலும் செல்வம் சேரும் காலம் இருக்கும் வரை அது சேர்வதை  விலக்கிடவும் முடியாது !

 

இந்த உலகியல் உண்மையை உணராமல்  மனம் ஏங்கி ஏங்கிப் புண்ணாகி நெடுந்தொலைவு சிந்தித்து மாண்டு போவதே இந்த வையகத்தில் மனிதர்களின் தொழிலாக உள்ளது !

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள் தப்பாமால் வந்து கொண்டிருகும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கதன்று.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051,  சிலை (மார்கழி) 25]

{09-01-2022}

-----------------------------------------------------------------------------------------